36,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட திருக்கல்யாண பூஜை தேங்காய்...


போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் திருக்கோவில் முருகன் திருக்கல்யாணத்தில் நடைபெற்ற சுவாரசியம். கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலசத் தேங்காய் ரூபாய் 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நபர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்று முடிந்ததை அடித்து திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

 முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க கவசம்   சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அலை கடலென பக்தர்கள் திரண்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

 திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல் இந்த முறையும்  கலச பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பாக ரூபாய் 3001ல் தொடங்கப்பட்ட ஏலம் படிப்படியாக உயர்ந்து நிறைவாக ரூபாய் 36 ஆயிரத்திற்கு  ஏலம் கேட்கப்பட்டது.

போடிநாயக்கனூர் குப்பிநாயக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ரூபாய் 36 ஆயிரத்து ஒன்றுக்கு பூஜையில் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காயை ஏலம் எடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

வேள்வி பூஜையில் வைக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் வீட்டில் வைத்து பூஜிக்கும் பொழுது பல்வேறு சுபிட்சங்கள் சுப காரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.



Leave a Comment