முருகனுக்கு முகத்தில் முத்து,முத்தாக வியர்த்த அதிசயம்...


கந்தசஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு; அம்மனிடம் வேல் வாங்கிய முருகனுக்கு முகத்தில் முத்து,முத்தாக வியர்க்கும் மகிமையை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம்.

தமிழ்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான திருத்தலமாக நாகை மாவட்டத்திலுள்ள சிக்கல் சிங்காரவேலவர் ஆலயம் விளங்கி வருகிறது.இத்தகைய சிறப்புகளை கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 13,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. தினமும் ஆலயத்திலிருந்து  சிங்காரவேலவர்சுவாமி தங்க மயில் வாகனம், வெள்ளிரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்நிலையில் கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி,சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல்வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வைபொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேரில் எழுந்தருளிய சிங்காரவேலவர் தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கினார்.

அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா,முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் வேல் வாங்கிய முருகப்பெருமான் தனி சன்னதியில் அமர்ந்ததும், சிங்காரவேலவரின் திருமுகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பியது. சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் சிங்காரவேலவர் முகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் அதிசயத்தை கண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment