கிருஷ்ணகிரியில் 9 கோயில் சப்பரங்கள் அணிவகுப்பு.... திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்...


கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று  இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில், பழையபேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.

இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 9 சப்பரங்களும் ஊர்வலமாக வந்தது.

இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சுவாமிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் தங்களது கோயிலுக்கு சென்றது.



Leave a Comment