அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி....


அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.

சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கிய சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும்   அழைக்கப்படுகிறது.  அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடன், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராக கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு.  எனவே மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாளாக பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இதையொட்டி திருமலையில் அனந்த பத்மநாப ஸ்வாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

ஏழமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து தெப்பகுளத்தில் பால், தயிர், தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு  சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment