மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா...


திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் திருமலையில் காலையும் இரவும் வாகன சேவை நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மூன்றாவது நாளான நேற்று இரவு முத்துப் பந்தலில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் கோவிந்தா கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளை வலம் வந்தார். மலையப்ப சுவாமி வீதி உலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். சொர்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தருவது கல்ப விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தனது பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சியாக நடந்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment