கைசிக ஏகாதசி விழா... வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தது


திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் நீண்டகாலமாக மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வருகிறது. திருப்பதி வேங்கடமுடையான் கோயிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு கார்த்திகை மாதம் நடக்கும் கைசிக ஏகாதசி விழாவில் ரங்கநாதருக்கும், நம்பெருமாளுக்கும், தாயாருக்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் திருப்பதி வேங்கடமுடையான் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆண்டுதோறும் ஆடி மாதப்பிறப்பன்று திருப்பதியில் நடக்கும் ஆனிவார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்ப்பிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்படவுள்ளதால் திருப்பதி கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை நேற்று காலை 6.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது. திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், பொக்கிஷ அதிகாரி குருரா ஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வஸ்திர மரியாதையை கொண்டு வந்தனர்.

திருப்பதி வஸ்திர மரியாதைக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் சுந்தர் பட்டர், அறங்காவலர் குழுத் தலைவர் வேலுசீனிவாசன், அறங்காவலர்கள் சீனிவாசன், ரங்கச்சார்யா, கவிதா ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



Leave a Comment