சபரிமலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறப்பு


மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையான மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 

இது தவிர மண்டல, மகர விளக்கு சீசன், விஷு மற்றும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு  மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலை வகிக்கிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.



Leave a Comment