வாழ்வில் இருளை நீக்கும் தைபொங்கல் வழிபாடு...


நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் தைப் பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு காரணம் பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் உழைப்பையும், உழைப்பாளிகளையும் போற்றி வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உழவர் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் போற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமங்களில் ஒரு வாரம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கல் வைப்பார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அன்று அதிகாலையே மாட்டை குளிப்பாட்டி கொம்புகள், கால் குளம்புகளில் வண்ணம் பூசி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை சூட்டி தூபதீபம் காட்டி பூஜித்து வணங்குவார்கள். 3ம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று விருந்து, விழா என்று குதூகலமாக பொழுதை கழிப்பார்கள்.

பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அங்கு விதவிதமான பட்டங்கள் பறக்க விடுவது மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. கடற்கரை, பொது மைதானங்களில், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி போட்டி போட்டு பட்டம் பறக்க விடுகின்றனர். இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் இருள் நீங்கி, ஒளி பிறக்கவும் எங்கும் பச்சையும் பசுமையுமாக இருக்கவும், எல்லாம் வல்ல சூரிய பகவானின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்.
 



Leave a Comment