2019ம் ஆண்டு ராசி பலன்கள் - ரிஷபம்


சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே

கிரகநிலை:
குருபகவான் சப்தம ஸ்தானத்திலும் - ராகு தைரிய ஸ்தானத்திலும் - சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.

இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. மார்ச்சு மாதம் அதிசாரமாக மாறும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். 
குடும்பம்:
குடும்பத்தில் மற்றவர்களால் தேவையில்லாத வீண் கலகம் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும். வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு உண்டாகலாம். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் பொறுமையை கடைபிடிப்பது அனுகூலம் தரும். உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். 
பொருளாதாரம்:
அவ்வப்போது பண பிரச்சனைகள் வந்தாலும் குரு பகவானின் சஞ்சாரத்தால் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். உங்கள் ராசிநாதனே சுக்கிரனாக அமைவதால் எந்த பிரச்சனையும் தலைக்கு வந்தது தலைப்பகையுடன் சென்றது போல் கடந்து செல்வீர்கள். கடன் சார்ந்த விஷயங்கள், முதலீடு சார்ந்த விஷயங்களை அனைத்திலும் அதிக கவனம் தேவை. வருமானம் சீராக இருக்கும். 
ஆரோக்கியம்:
சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது. 
பெண்மணிகள்:
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். 
உத்தியோகஸ்தர்கள்:
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். 
வியாபாரிகள்:
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். 
அரசியல்வாதிகள்:
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 
கலைத்துறையினர்:
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 
மாணவமணிகள்: 
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

கார்த்திகை 2 - 3 - 4:
இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். 
ரோகினி:
இந்த ஆண்டு மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. 
மிருகசீரிஷம் - 1, 2:
இந்த ஆண்டு வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.  பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

பரிகாரம் : அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: “தாமரை மலரை” பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் 
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 

- ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

போன் - 7845119542



Leave a Comment