திருப்பதியில் இன்றும், நாளையும் ஆர்ஜித சேவை, திவ்ய தரிசனம் ரத்து


ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோவிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதித்தோமோ அதேபோல், 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளோம், எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
டிசம்பர் - 31, ஜனவரி - 1 இரு நாட்கள் ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் கார்டு வழங்குவது, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாளை, நாளை மறுநாள் சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட்டதோ, அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கான தரிசன நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடக்கின்றன. 1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



Leave a Comment