அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தேரோட்டம்


சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.


முத்துக்குடைகள் முன்னே செல்ல, காவி உடை அணிந்து, தலைப்பாகை அணிந்த பக்தர்கள் பக்தி கோ‌ஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், பன்னீர், வெற்றிலை ஆகிய பொருட்களை சுருளாக படைத்து அய்யாவை வழிபட்டனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தலைமை பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது.



Leave a Comment