விசா வேங்கடேசப் பெருமாள்...


செங்கல்பட்டு, பழைய சீவரத்தில், வெங்கடேசர் சங்கு சக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார்.

சென்னை- வேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது.

ஹைதராபாத் - உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க அருள்வதால், இவர் விசா வேங்கடேசப் பெருமாள் எனப்படுகிறார்.

தஞ்சாவூர், வரகூரில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு, வேலை கிடைத்து வெளியூர் செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

திருச்சி அருகே குணசீலத்தில் செங்கோல் ஏந்திய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துகிறார்.

ஈரோடு, பெருந்துறையில், வேப்பமரத்தடியில் ஐந்து கற்கள் வடிவத்தில் வன வேங்கடேசப் பெருமாளும் தாயாரும் அருள்கிறார்கள்.

கரூரில் உள்ள கல்யாண வெங்கடரமணர், மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவரான டங்கணாச்சாரி எனும் பக்தருக்காக இத் தலத்தில் நிலைகொண்டார்.

செங்கல்பட்டு, அமிர்தபுரியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கருடனின் கையில் உள்ள வாசுகி பாம்பிற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாகிறது. எனவே, இது சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாகும்.

கோயமுத்தூர், உடுமலைப்பேட்டையில், கருவறையில் பெருமாளும் அனுமனும் சேர்ந்திருக்க, இது, சீனிவாச - ஆஞ்சநேயர் கோயிலாயிற்று.

கிருஷ்ணகிரி, ஓசூரில் மலை மீது சிலை கொண்டுள்ள பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் திருடு போன பொருள் கிடைத்து விடுகிறது.

கோயமுத்தூர், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் துளசி, வேம்பு, வெள்ளெருக்குபூ மொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகியவை கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தருகிறார்கள். இது வெண்குஷ்டத்தை நீக்குகிறது.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, பிரசன்ன வெங்கடேசர் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்க அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.

திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில், மார்கழி மாதம் முழுவதும், இத்தல ஆண்டாள் சூடிக் களைந்த மலர் மாலைகளையே பெருமாளுக்கு சாத்துகிறார்கள்.

திருநெல்வேலி, உதயநேரிபாலாமடையில் அருளும் வெங்கடாஜலபதி அபிஷேகப் பாலை பிரசாதமாக அருந்தினால் மன, சரும நோய்கள் குணமாகின்றன.

திருநெல்வேலி, சன்யாசி கிராமத்தில் உள்ள கல்யாண சீனிவாசர் ஆலய கருவறை விமானமும் திருப்பதியைப் போலவே ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாரூர், குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய நரசிம்மர் கடன் தொல்லை நீக்குகிறார். ஞாயிறன்று விரதமிருந்து கருடனை வணங்க மழலை வரம் கிட்டுகிறது.

திருநெல்வேலி, கருங்குளத்தில், மன்னன் சுபகண்டன் இரண்டு சந்தனக் கட்டைகளை பிரதிஷ்டை செய்து வெங்கடாஜலபதியாக வழிபட்டான். இதய நோய்களைத் தீர்க்கிறார் இந்தப் பெருமாள்.

திருநெல்வேலி, மேலத்திருவேங்கடநாதபுரத்தில் திருவேங்கடமுடையான் கருவறையில் 12 ஆழ்வார்களும் 12 படிகளாக உள்ளார்கள்.

திருவண்ணாமலை, நல்லூரில், சுந்தரவரத ராஜரின் திருவடி கீழ் உள்ள கருடாழ்வார், பக்தர்களின் பிரார்த்தனையை பெருமாளிடம் பரிந்துரைப்பதால், இவர் பரிந்துரைக்கும் கருடன் எனப்படுகிறார்.

தூத்துக்குடி, புன்னைநகரில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளின் ஏகாந்த சேவையை வியாழன்தோறும் தரிசித்தால் கிரக தோஷங்கள் நீங்குகின்றன.



Leave a Comment