சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா


திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். மேலும் இக்கோவிலில் அம்மனே, பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார்.
பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருந்திருவிழா நாட்களில் அம்மன் புரிவதாக மரபு.
இத்தகைய சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதைத்தொடர்ந்து 9-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதையடுத்து 10, 11, 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முறையே பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் ஆகியவற்றில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலை பல்லக்கில் புறப்பாடாகிறார். இரவில் மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளுகிறார். இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.



Leave a Comment