கிருஷ்ணரை கொண்டாடும் பஞ்ச துவாரகைகள்


 

எப்போதும் ஆட்டம்,கொண்டாட்டம் என வாழ்வின் அத்தனை வண்ணங்களையும் நமக்கு காண்பித்த பகவான் கிருஷ்ணரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. மதுரா சிறைச்சாலையில் தான், அவர் பிறந்தது என்றாலும், அவர் ஆட்சி புரிந்தது என்னவோ துவாரகையில் தான்.

கிருஷ்ணர் தனது தாய் மாமன் கம்சனை மதுராவில் அழித்தபோது, அதைக் கேள்விப்பட்ட கம்சனின் மாமன் மதுரா மீது போர் தொடுத்து தோல்வியை தழுவினான்.

போரினால் மதுராவின் கோட்டை வலுவிழந்து விட்டது. கிருஷ்ணருடைய  பாதுகாப்பிற்கு கருடன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இடம்தான் துவாரகை. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபம் காரணமாக யாதவ குலமே அழிய நேர்ந்தது.  துவாரகா நகரின் பெரும் பகுதியும் கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது இருக்கும் புனிதத் தலமான  ஆதிதுவாரகையின் வாயிலாக ஐந்து திருத்தலங்கள் விளங்குகின்றன. அந்தத் திருத்தலங்கள்  ‘பஞ்சதுவாரகா’ என்று அழைக்கப்படுகிறது.

 

                                                            

வைகுண்டம் செல்லும் நுழைவாயில் என்று  கருதப்படும் ‘மோட்ச துவாரகை’தான் பஞ்ச துவாரகையில் மிகவும் பிரதானமானது. 108 வைணவத் திருத்தலங்களில் இத்தலம் 104-ஆவது திவ்ய தேசமாகும். குஜராத் மாநிலத்தில் உள்ள ‘ஓசா’ துறைமுகத்திற்கு அருகில், ‘கோமதி’ என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது இத்தலம். இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பக்தர்களின் நாயகனான ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி, கல்யாண நாராயணர் என்று அன்புடன் வழிபடுகிறார்கள். சங்கு சக்கர தாரியாக, நான்கு கரங்கள் கொண்டு சேவை சாதிக்கிறார் இங்குள்ள மூலவர்.இங்கு  பகவான் கிருஷ்ணருக்கு திகட்ட திகட்ட காலை ஐந்து மணி முதல் இரவு வரை பதினேழு முறை பிரசாதம் சமர்ப்பித்து, மணிக்கு ஒருமுறை விதவிதமாக ஆடை மாற்றி அலங்கரிக்கிறார்கள். காலை திருப்பள்ளியெழுச்சி தொடங்கி இரவு சயனம் வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.இது தவிர  காலையில் தங்கப்பல் குச்சியால் கிருஷ்ணரின் பற்களைத் துலக்குவார்கள். இதற்குப் பிறகு, லட்டும் ஜிலேபியும் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஏழரை மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைப்பார்கள். எட்டு மணிக்கு சர்க்கரை, பால், தயிர் படைக்கப்படுகிறது. பிறகு, அப்பம், பாலில் கலந்த சிற்றுண்டியுடன் திருவமுது படைக்கப்படுகிறது. அதற்குப்பின், கனிவகைகள். இப்படி பிரசாதங்களைத் தொடர்ந்து அளித்தபின் உணவு செரிக்க லேகியமும் கொடுக்கிறார்கள்.

பஞ்ச துவாரகையில் அடுத்து ‘பேட் துவாரகை’. இத்தலம் கடலிலுள்ள தீவுபோல் இருப்பதால் தீவுத் துவாரகை என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள அரண்மனை, பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த அரண்மனை எனப்படுகிறது.

                                                              

குஜராத் மாநிலம், போர்பந்தர் என்னும் ஊரிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீநாத் துவாரகை.இது  மூன்றாவது துவாரகை. இத்தலத்தில் கோவில் கொண்டு அருள்புரியும் பகவான் கிருஷ்ணருக்கு தினமும் எட்டு வேளை  வழிபாடுகள் நடைபெறுகின்றன. பகவான் வைரம், வைடூரியம் முதலான நவரத்தினங்கள் பதித்த திருவாபரணங்களை  தினமும் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

நான்காவது டாஸ்ரோடி துவாரகை. இத்தலம் துவாரகையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பகவான் கிருஷ்ணர் அவதரித்த சிறைச்சாலை அமைந்த ஊரான வடமதுராவிலிருந்து, பாதாளம் வழியாக தீர்த்தம் நதியாகப் பாய்ந்து இந்த ஊருக்கு வருவதாகக் நம்பப்படுகிறது.

ஐந்தாவது மூலத்துவாரகை. இத்தலம் போர்பந்தரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொஷனார் என்னும் ஊருக்கு அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பகவான் பல ஆண்டுகள் அரசாண்டார். இங்கிருந்துதான் கிருஷ்ணர் வைகுண்டம் சென்றார் என்றும்,அதன்பின் இத்தலம் கடலில் முழ்கியது என்றும் கூறுகிறார்கள். மூலத்துவாரகையில் அனைத்து முக்கிய நதிகளும் சங்கமம் ஆவது சிறப்பு.



Leave a Comment