சனி பகவான் சுயம்புவாகத் தோன்றிய குச்சனூர்


 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது  குச்சனூர்  . இங்கு தான் நவக்கிரகங்களில் முக்கியமானவரான சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ளார்.

 

தல வரலாறு

 செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற  அரசன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தை வரம் கேட்டு  இறைவனிடம் வேண்டிவந்தான். அப்போது கோயிலில் அசரீரி ஒன்று அரசன் காதில் விழுந்தது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அப்படி அசரீரியில்கேட்டபடியே ஒரு  சில தினங்களில்  பிராமணச் சிறுவன் ஒருவன் அரசனிடம் வந்து சேர்ந்தான். அரசனும்  அந்த சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டினான். சில காலத்திற்கு  பிறகு , அசரீரியில் சொன்ன படியே அரசிக்கு  ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர் அரசனும், அரசியும்.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாயினர். மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான் சந்திரவதனன். சொந்த மகன் சதாகன் அப்படி இருக்கவில்லை. இதனால், அரசன் வளர்ப்பு மகன் சந்திரவதனனையே  அரசனாக்குவது என்று முடிவெடுத்து அவனுக்கே முடிசூட்டினான்.

 இதைத்தொடர்ந்து  அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. சனி திசையால் அரசன் தினகரன் பெரும் துயரப்பட்டான் .தந்தை துயரப்படுவதை கண்டு சகிக்காத சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் இரும்பால் சனியின் உருவத்தைப் உருவாக்கி வழிபட்டான். இந்த வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் சந்திரவதனன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு தகுந்தாற்போல் சனி தோஷம் பிடிக்கிறது. அவரவர் பாவ வினைகளுக்கேற்பவே ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், நன்மைகள்  செய்பவர்களுக்கு, அவரவர் நல்ல செயல்களுக்கு ஏற்றார் போல சனி தோஷத்தின் இறுதியில் நன்மைகள் ஏற்படும்” என்றார்.இந்த விளக்கத்தை கேட்டும் மனம் அமைதி பெறாத சந்திரவதனன் , சனீஸ்வர பகவானிடம்   தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி மன்றாடினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றார்.

                                                      

 சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டான்  சந்திரவதனன். துன்பங்கள் தீர்ந்த நிலையில் சனீஸ்வர பகவானிடம் வேண்டிய சந்திரவதனன் , சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அத்துன்பத்திலிருந்து மீட்க வேண்டினான். சனீஸ்வரனும் கோரிக்கையை ஏற்று , குச்சனூரில் சுயம்புவாகத் தோன்றினார். சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய  இடத்தில் குச்சுப்புல்லால் கூரை  அமைத்து சிறிய கோவில் உருவக்கப்பட்டது. இதன்பிறகு  செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூராக மாறியது . இதுவே குச்சனூரில் சனீஸ்வர பகவான் தோன்றிய வரலாறு .

 

சனி தோஷத்தால் அவதிப்படும் பலரும் குச்சனூர் சனீஸ்வர பகவான்  கோயிலுக்கு வருகை தந்து துயர் நீங்கி செல்கின்றனர்.

 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!



Leave a Comment