சபரிமலை ஐயப்பன் பற்றிய அரிய தகவல்கள்


சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ள பக்தர்கள் ஐயப்பன் பற்றி விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.
குருசாமிக்குரிய தகுதி :
சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.
கட்டு கட்டும் முறை :
நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கற்பூர தீபம் :
ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.
நோய் நீக்கும் வழிபாடு:

ஐயப்பன் கோயிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.
நெய் அபிஷேகம்:
சபரிமலைக்கு சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.
மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.
ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக் கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள்:
சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு உணவைக்குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.
41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14ம் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.
வாபர் வழிபாடு:
ஐயப்பன் கோயில் 18ம் படிக்குகீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.
நெய் தேங்காய் யாருக்கு?:
சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.
சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.



Leave a Comment