வெற்றிகளை அள்ளித்தரும் விஜயதசமி!


வெற்றியைக் கொண்டாடும் விழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தி, பத்தாவது நாளான தசமியன்று சாந்தமடைந்தாள். தேவியின் வெற்றியை தேவர்கள் கூடி இந்த தசமி நாளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கலைமகளும், திருமகளும், மலைமகளும் இணைந்த சக்தியை இந்த நாளில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

குழந்தைகள் படிப்பு தொடங்கும் நிகழ்ச்சியும் ஏடு தொடங்குதல் என்ற பெயரில் நடைபெறும். மேலும் புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எல்லாமே இந்த விஜயதசமி நாளில் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் வன்னிமர வேட்டை எனும் பாரிவேட்டை நிகழ்வும் இரவில் நடக்கும். உலகமே கண்டு வியக்கும் மைசூரு தசரா பண்டிகையும் இந்த விஜய தசமி நன்னாளில் தான் கொண்டாடப்படுகிறது.

ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அஞ்ஞாத வாசம் முடித்த பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களைப்பெற்று அம்பிகையின் அருளைப் பெற்ற சுப நாளும் இதுவே. பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்ஹரிக்க முடியாமல் ஈசனை எண்ணி வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசிர்வதித்து உதவினார். அதன்படி அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். இதைக்கண்டு கொண்ட அம்பிகை வன்னி மரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே வன்னிமர வேட்டை என இன்றும் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் பல கொண்ட இந்த விஜயதசமி நன்னாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம்.



Leave a Comment