ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து, ராப்பத்தின் சிறப்புகள்....


வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர்.
பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப்பாடுவர். இந்தக் காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் எனும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.


இதோ... வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்களும் விழாக்களும் விமரிசையாக துவங்கிவிட்டன. இந்த வேளையில், அரையர் சேவையில் பெருமாளை சேவிக்க காணக் கண் கோடி வேண்டும்.
அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ தொப்பி ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இந்தச் சேவையை தொடங்கிவைத்தார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவங்களைக் காட்டி அரையர் காட்டி நடிப்பார்கள்.
அரையர் சேவையில் முத்துக்குறி எனும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. இதைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவதைப் பார்த்து சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள்!

பகல் பத்து ராப்பத்து!
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி, தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது!


உதவிய பாசுரம்!
ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான ஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய்ம்மறந்து போனார்.
அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம், ‘நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?’ என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.


அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.
அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார்.



Leave a Comment