பகையை விலக்கும்...செவ்வாய் மந்திரம்!


நவக்கிரகங்களில் மூன்றாவது உள்ள கிரகம் செவ்வாய். இந்த கிரகத்திற்கு அங்காரகன், சக்திதரன், குமரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன் உள்பட பல பெயர்கள் உள்ளன. அங்காரகம் என்றால் நெருப்பு என்று பொருள். இந்த கிரகத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் ஏழு கதிர்களைக் கொண்டதாக உள்ளது. 

செவ்வாய்க்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை உஷ்ணம், அக்ருமுகம், வியாலம், துதிரானம், நிஸ்தரிசனம் ஆகியவையாகும். முக்கோண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ரத்தத்திற்குக் காரகன். உயர்ந்த சக்தியை கையில் வைத்துக் கொண்டு மங்கலத்தைச் செய்பவன்.

செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சாரம் செய்கிறது. செவ்வாய் கிரகத்தின் உலோகம் தாமிரமாகும். தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும், தன்மானத்துடன் வாழ்வோருக்கும், நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் மூல பலமாக விளங்குவது இந்த செவ்வாய்க்கிரகம்தான். ஆண், பெண் ஜாதகங்களில் செவ்வாய், ஜென்ம லக்னத்தில் இருந்தாலோ, சந்திர லக்னத்தில் இருந்தாலோ, சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்தாலோ, இரண்டாம் இடத்தில் இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் என்று பொருள்.

ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் கிரகத்தை வழிபடும் போது, அதற்காக காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

செவ்வாய் காயத்ரி மந்திரம் :

‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் தேவனை அறிந்துகொள்வோம். தடைகளை அகற்றும் கரங்கள் கொண்ட அவனை நோக்கி தியானம் செய்வோம். பலம் பொருந்திய அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மங்கலம் உண்டாகும். உள்ளம் தூய்மை பெறும். உடல் உறுதியாகும். மனம் திடமாகும், வீரம் அதிகரிக்கும், பகை விலகும் என்பது நம்பிக்கை. 



Leave a Comment