திருப்பதியில் இம்மாதம் மூத்த குடிமக்களுக்கான தரிசனங்கள் ரத்து


கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் இம்மாதம் (டிசம்பர்) மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது. இந்த தரிசன முறையை தான் இம்மாதம் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருக்கிறது.



Leave a Comment