சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமா ?


சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்ற சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும்  கொஞ்சம் நடுக்கம் தான். கோவிலுக்கு போனால் கூட , சனீஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்படும் பிரசாதங்களையோ, திருநீற்றையோ நம் வீட்டிற்கு எடுத்துவர யோசிப்போம். சூரியபகவானுடைய மகனும்,கறுத்ததேகம் உடையவன் என்று கூறப்படுபவருமான சனி பகவானையே மகிழ செய்து, அவரால் நேரக்கூடிய துன்பத்தை வென்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் யார் எப்படி சனி பகவானிடம் வரத்தைப் பெற்றான் என்பதைப் பற்றி இப்பதிவில்  பார்ப்போம்.

ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மகா பராக்கிரமசாலி. ஏழு கண்டங்களுக்கும் அதிபதியான அம்மன்னன் ஆட்சி காலத்தில், சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நேரம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமானது, மிகக் கொடிய பஞ்சத்தை தோற்றுவிப்பதும், பன்னிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்க, தனது குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தன் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்  தசரத சக்கரவர்த்தி. அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகளின் தலையெழுத்து,துன்பப்பட்டே  ஆக வேண்டும்,இதை  பிரம்மவாலும் மாற்ற முடியாது என்றார்.

இதைக் கேட்டு தசரதனால்  சும்மா இருக்க முடியவில்லை. எப்படியாவது  பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக ,வெண்ணிறமான புரவிகளோடு ஒளிர்ந்த  ரதத்தில் ,ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்றான். தேவர்கள்,அசுரர்கள் ,மனிதர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .

சனிபகவான் புன்னைகை புரிந்தபடி, “ ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,முதலிய அனைவரும், என் பார்வை பட்டவுடன் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று சனிபகவான் கூறினார்.

 

தசரதன் சனிபகவானைப் பார்த்து,“ தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்” என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறிய  சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் என்று கூற

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து  பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே       

நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ  ஸுநவே

துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...

இதன் விளக்கம் :

 

கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக் கூடியவனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தேகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறான்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளானவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , “ஏ ராஜனே , நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு  தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்த பிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புறுத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினார்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ,நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் பெறுவர்.  



Leave a Comment