திருச்செந்தூர் ஆவணித்தேரோட்டம் கோலாகலம்


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருவிழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று சுவாமி குமரவிடங்கப் பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து பாளை சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மேலக்கோயில் சேர்ந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்தி லும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

விநாயகர் தேர் இன்று காலை 5.35 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதையடுத்து சுவாமி தேர் காலை 6.10 க்கு புறப்பட்டு 7.20 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. அம்மன் தேர் காலை 7.30 க்கு புறப்பட்டு 8 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment