சகல செல்வங்களை அருளும்...மகாலட்சுமி ஸ்லோகம்!


வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும்.

நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.

பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!

நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள் 
நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா!



Leave a Comment