மனம் போல் மாங்கல்யம் அருளும்...ஸ்ரீ கோதண்டராமர்


அரியலூருக்கு பெருமை சேர்க்கும் தலமாக உள்ளது கோதண்டராமர் கோவில். கோதண்டராமரை தரிசித்தால் குறையில்லாத மணவாழ்வு அமையும். முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி என்கிறார் கோவில் அர்ச்சகரான கிருஷ்ண பட்டாச்சாரியார். பூமிக்கடியில் புதையுண்ட இக்கோவிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்றும் ஒரு கதையுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ஆலயக்கருவறை தேர்போன்ற வடிவில் உள்ளது. ஒரே பீடத்திலமைந்த கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் எனும் ஊரில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. தன்னிகரில்லா தசாவதாரப் பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசித்துவர, அரியலூர் கோதண்டராமர் கோவிலுக்கு ஒருமுறை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.

அரி என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அரி குடிகொண்ட ஊர் எனும் பொருளில் அரி+இல்+ஊர் என்பது அரியலூர் ஆனது. துர்வாசரால் சபிக்கப்பட்டார் அம்பரீஷ முனிவர். பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒருசேரக் கண்டாலே அவரது சாபம் நீங்கும். என்றும் துர்வாசர் சபித்தார். எனவே அம்பரீஷர் தெற்கு நோக்கிப் புறப்பட்டு அரியலூரில் வந்து கடும்தவத்தில் ஈடுபட்டார். முனிவரின் தவத்தை மெச்சிய பகவான் தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார். கோதண்டராமர் கோவில் தூண்களில், இந்த தசாவதாரக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. அவற்றுள் நரசிம்மாவதாரக் கோலத்தை தரிசனம் செய்து வழிபடுவோருக்கு, எதிரிகளை வெல்லும் சக்தியும், செய்யும் செயல்களில் வெற்றியும் கிடைக்கிறது. மனக்குறைகள் நீங்குவதோடு, திருமண வாழ்வும் அமைகிறது. 



Leave a Comment