திருப்பதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்....


தலயேரு குண்டு:

பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

கும்மர மண்டபம்:

தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்க ளைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப் படுகிறது.


த்ரோவ்வ நரஸிம்முடு:

திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.

கண்டா மண்டபம்:

திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் இந்த கண்டா நாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே சாப்பிடுவார்களாம்.

மோகாள்ள முடுபு:

திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது. அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்களாம். எம்பெருமானாருக் கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.

அவ்வசரிகோண:

மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. ‘அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.

த்ரோவ்வ பாஷ்யகாருலு:

திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. ‘த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.

ஸார்ல பெட்டெலு:

மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!



Leave a Comment