ஆடி வெள்ளி... அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை


அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள ரவுத்திரதுர்கையம்மன் சன்னதியில், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும், எலுமிச்சையில் விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

கோவை பேரூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 5 ஆயிரம் எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் 10 ஆயிரம் சங்குகளைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



Leave a Comment