ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் ஜுலை 20 - ஆடிப்பெருவிழா


சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டபட்டுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் அமைந்திருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இத்திருத்தலம் மாற்றபட்டதாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் போற்றப்பட்ட ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் வைத்து வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரிலும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் இத்திருத்தல அம்மன் வணங்கப்படுகிறாள்.

 

இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காளிகாம்பாள் தன் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் வைத்து அருள்பாலிக்கிறார். மேலும் இடது கை வரதமுத்திரையுடன் வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் அம்மனின் கருவறையைச்சுற்றி முருகன் வள்ளி தெய்வானையுடன் சமேதராக காட்சியளிக்கும் சன்னதியும், அருணாச்சலேஸ்வரர் சன்னதியும், துர்கை அம்மன், சண்டிகேஸ்வரரும், சூரிய, சந்திரர் சன்னதிகளும் நவகிரகங்களும் அமையப்பெற்றுள்ளன. 

 

அத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் வருகிற ஆடி மாதம் 4 ஆம் தேதி (20-07-2018) ஆடிப்பெருவிழா கொண்டாடப்படுவிருக்கிறது. தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதணை நடைபெறவுள்ளது. இதில் (20-07-2018 முதல் 14-9-2018 வரை) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வரும் பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தனம், விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் என 108 குடம் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு பக்தர்கள் அணைவரும் ஸ்ரீகாளிகாம்பாள் அருளை பெறவிருக்கிறார்கள்.



Leave a Comment