புண்ணியத் தீர்த்தங்களில் நீராடும் முறைகள்!


புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் முன்னர் கவனிக்க வேண்டியது. தண்ணீர் அருகில் சென்றவுடன் காலை வைக்காமல். கரையில் நின்றவாறு, குனிந்து வலதுகையில் சிறிது தண்ணீரை அள்ளி எடுத்து, கடவுளை நினைத்து வணங்கி பிரார்த்தனை செய்து பின், தலையில் முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். முதலில் வலதுகாலை எடுத்து வைத்து தண்ணீருக்குள் இறங்கிக் குளிக்க வேண்டும். தீர்த்தங்களில் குளிக்கும்போது, மேலாடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் குளிக்கவே கூடாது, தலையை நனைக்காமல் குளித்து வரக்கூடாது. தலையும், உடலும் நனையும்படி மூழ்கிக் குளித்து எழ வேண்டும்.

தண்ணீரில் எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது போன்ற அசுத்த காரியங்களை செய்ய கூடாது. இந்தத் தவறுகளைச் செய்வதால் எந்தவித புண்ணிய பலனும் கிடைக்காது. குளத்திற்குள் குளித்துவிட்டு, உடுத்திய ஆடைகளையே களைந்து, உள்ளே போடக் கூடாது. கற்களை எடுத்துத் தண்ணீருக்குள் வீசக் கூடாது. முடிந்த வரையில் தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். அதுவே புண்ணிய பலன் பெற வழி வகுக்கும்.

முதலில் காசிக்குச் சென்று நீராடியவர்கள், கடைசியில் இராமேஸ்வர சென்றும் கடலில் நீராடி இறைவனைத் தொழ வேண்டும். அப்போழுது தான் பக்தர்கள் மேற்கொண்ட புண்ணிய தீர்த்த யாத்திரைப் பயணம் முழுமை பெறும் என்பது ஐதீகம். கங்கை தீர்த்தத்துடன், இராமேஸ்வரம் தீர்த்தத்தையும் கலந்து புனித நாட்களில் வீட்டைக் கழுவி சுத்தம் செய்த பின் தெளித்தால், வீட்டில் தெய்வீக அருளும் இறைவனின் அனுக்கிரகமும் கிடைக்கும்.



Leave a Comment