திருமண பாக்கியம் அருளும் அருள்மிகு எல்லையம்மன்


சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவில் உள்ளது சுமார் 200 வருடங்கள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி ஆலயம். இத்திருத்தலத்தின் நுழையும் பொழுதே விநாயகர், ராஜராஜேஸ்வரி அல்லி தர்பார், கையலங்கரி, முருகன் பார்வதியிடம் வேல் வாங்குதல், நால்வர் நடராஜர் முதலிய கதை சிற்பங்கள் உள்ளன. இத்திருத்தலத்தின் வலது பக்கம் விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். கருவறையின் மேலே அழகான விமானம். இங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார்.வலது கால் கீழே இருக்க இடது கால் மடிந்து அமர்ந்த கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கிறாள். இக்கோவிலின் ஒரு அதிசயமாக அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகிய நால்வருக்கும் ஒரு தனி மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்கள்.

இக்கோவிலில் சித்திரா பௌர்ணமி விசேஷ நாட்களில் 102 குடங்களில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். வைகாசி மாத விழாவின் போது 1008 இளநீர் அபிஷேகம் நடைபெறும். ஆடி மாத பூச்சொரிதல் விழாவும் இங்கு பிரசிதம். மேலும் இக்கோவிலின் சிறப்பம்சமாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் 11 வாரம் செவ்வாய் அல்லது வெள்ளி அன்று ராகு காலத்தில் எலுமிச்சை மூடி விளக்கு ஏற்ற திருமணத் தடைகள் நீங்கும்.

 



Leave a Comment