சோதனைகளைப் போக்கி நல் அருள் தரும் சோமவார பிரதோஷம்!


சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம்.

அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும். பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில். அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம்.

அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!



Leave a Comment