கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா


பிரசித்த பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் மே 20-ந்தேதி வசந்த உற்சவ விழா தொடங்குகிறது.
கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான விழா மே 20-ந்தேதி மாலை தொடங்குகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.

வருடம் ஒருமுறை இந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருள்வது வழக்கம். கோடையின் வெப்பத்தை தணித்து, குளிர்ந்த மழையை பெய்ய வைப்பதற்காக இங்கு பெருமாள் வந்து செல்வது வழக்கம் என ஜதீகமாக கூறப்படுகிறது.

மேலும் அழகர்மலையின் மூலிகை கலந்த வசந்த காற்றுகள் இந்த காலநிலையில் அதிக அளவு வீசும் என்பதால், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

பின்னர் பெருமாள் வந்தவழியாக திரும்பி சென்று இருப்பிடம் சேருகிறார். திருவிழாவின் 10 நாட்கள் தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ம்நாள் நிறைவு நாளில் விஷேச பூஜைகள் சாமிக்கு செய்யப்படுகிறது.



Leave a Comment