திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.3.22 கோடி


திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3 கோடியே 22 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இது தவிர பிற மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
22 ஆம்தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 717 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கு 20 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 16 மணி நேரம், மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணியதில் ரூ.3.22 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.



Leave a Comment