நீலகிரி செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய அன்னமலை முருகன்...


நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்து இருக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். அமைதியைத் தேடி பலர் இமயமலைக்கு செல்வார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அதற்கு இணையான ஒரு புனிதமான இடம் உள்ளது.


அதுதான் நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அன்னமலை தண்டாயுதபாணி கோவில். மஞ்சூர் கீழ்குந்தாவை அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில், நம்மை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் இது.


கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம்.


கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. இது தவிர நாகராஜர் சன்னிதி, நவக்கிரகங்கள் போன்றவற்றையும் தரிசிக்கலாம்.


நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.


சிவன் குகை :
கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான்.


திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.


ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன்.


அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது.


அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


அமைவிடம் :
கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு.



Leave a Comment