பகவதி அம்மனுக்கு நள்ளிரவில் ஒடுக்கு பூஜை


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அடியந்திரபூஜை, குத்தியோட்டம், சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தன. சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்களை கோவில் பூசாரிகள் 9 மண்பானைகள் மற்றும் ஓலைப்பெட்டிகளில் வைத்து பவனியாக கொண்டு வந்தனர். மேலும் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. மண்பானைகளை சுமந்து வந்த பூசாரிகள் தங்களது வாயில் துணியால் முடியிருந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளைத்துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டிருந்தது. இந்த பவனி கோவிலுக்கு வந்து முடிவடைந்தது. ஒடுக்கு பவனியின்போது எந்த சத்தமும் கேட்காதபடி மக்கள் அமைதியாக இருந்தனர். ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை சுற்றி வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை அம்மனுக்கு படையலிடப்பட்டன. அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனை நடந்தபோதே திருவிழா திருக்கொடியும் இறக்கப்பட்டது.



Leave a Comment