ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவ பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையும், திருப்பாவாடை கோஷ்டியும் நடந்தது. நம்பெருமாள் நேற்றிரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமாமணி மண்டபத் தில் இருந்தவாறு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 6 முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் காலை 9.30க்கு திருமாமணிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்றிரவு 8.30 முதல் 9 வரை மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. இரவு 9 மணி முதல் மறுநாள் 9ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்தனுமண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பின் அதிகாலை 4 முதல் 5 வரை சாற்றுமறை நடக்கிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி,உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜனவரி 9ம் தேதி முதல் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 18ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. நாளை மாலை முதல் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல்பத்து உற்சவமான 2 ஆயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுகிறார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.



Leave a Comment