திருப்பதியில் ஆங்கிலப் புத்தாண்டுக்கு சிறப்பு அலங்காரம் கிடையாது....


திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சிறப்பு அலங்காரங்கள் எதுவும் நடைபெறாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் எப்போதும், வைகானச ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், யுகாதி மட்டுமே விமரிசையாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, யுகாதி, வருடாந்தர பிரம்மோற்சவம், வருடாந்திர தெப்போற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின்போது, ஏழுமலையான் கோவில், மாடவீதிகள், திருமலையில் உள்ள முக்கிய பகுதிகளில் மலர் அலங்காரம், மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அதனால், கோவிலில் சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆங்கிலப் புத்தாண்டின்போது, கோவில்களில் எவ்வித சிறப்பு அலங்காரங்களும் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் நடைபெறும், வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்கும் என்வும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment