திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்...


திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரப்படுத்தி உள்ளது. வைகுண்ட ஏகாதசி வருகிற 29ம் தேதியும், துவாதசி 30ம் தேதியும் வருகிறது. இந்த 2 நாட்களும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தரிசனம் என்று தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரிக்கும். எனவே, 28ம் தேதி காலை 10 மணியில் இருந்து வைகுண்டம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அவை நிரம்பிய பின் ஆழ்வார் தோட்டம், நாராயணகிரி தோட்டம், கர்நாடக சத்திரம், மேதரமிட்டா, மேற்கு மாட வீதியில் உள்ள நான்கு மாடவீதி ஆகிய இடங்களில் வரிசைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தடையின்றி அன்னப்பிரசாதம், டீ, காபி வழங்கவும், 4 லட்சம் வாட்டர் பாக்கெட்டுகள் வழங்கவும், தற்காலிக கழிவறை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment