சனிப்பெயர்ச்சி - உங்கள் அருகில் உள்ள பரிகாரத் தலங்கள்


சென்னை மேற்கு மாம்பலம்
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வடதிருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.
சென்னை பூந்தமல்லி
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் ஆலயம், இந்த ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம்.

ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக்கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
திருநெல்லிக்காவல்
திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.
இடும்பாவனம்
முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.



Leave a Comment