நாமத்தால் வந்த மதிப்பு!


 

ராம நாமத்தின் மதிப்பு!


தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை, பேசவும் ஆளில்லை, வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.  அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது. 

வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். 
சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.  ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள். இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.


இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. 

ஏம்மா அழற?அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.அம்மா அழுதுண்டே இருக்காங்க..
சரி, அழாத.. இங்க வா..

  

 


ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும்  என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.

சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன திரும்பி வந்தது. அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.
வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார். என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.

யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள். யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?

 



Leave a Comment