நிம்மதி தரும் நீராடல்!


ஒரு காலத்தில் வான் நதியாக இருந்த கங்கையை,பகீரத முனிவர் தன் தவ வலிமையால் பூமிக்கு வரும் படி அழைத்தார்.ஆனால் அவரிடம் கங்கா தேவி,எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு,எல்லாரும் அதனை என்னிடம் கொண்டு வந்து] சேர்ப்பார்கள்.எனவே நான் வரமாட்டேன் என்று தயக்கத்துடன் மறுத்தாள்.

அதற்கு பகீரத முனிவர்,நீ பாவம் செய்பவர்களை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறாய்.ஆனால் உன்னிடம் வந்து ஏராளமான மகான்களும் நீராடுவார்களே  என்பதை  ஏன்  மறந்து விட்டாய்?.அதன் மூலம் நீ எப்போதுமே சுத்தமாகவே இருப்பாய் என்று கூறினார்.இதையடுத்து மகிழ்ச்சியோடு பூலோகம் வந்தாள் கங்காதேவி.

 

வட திசையில் மட்டுமே ஓடி வந்த  கங்காதேவி,தென்திசை பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் விதமாக வருடத்தில் ஐப்பசி மாதத்தில் மட்டும் மயிலாடுதுறை  மயூரநாதர் ஆலயத்தின் அருகில் ஓடும் காவிரியின் துலா  கட்டத்தில் நீராடினால்,பாவங்கள் நீங்கும்.

முக்தி கிடைக்கும் என்பது  நம்பிக்கை. அந்த மாதத்தில் மட்டும் அங்கு ஏராளமானவர்கள் குவிவார்கள்.ஐப்பசி மாதம் கடைசி நாளில் நடைபெறுவது கடைமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.பிற நாட்களை  விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது சிறப்பு தருவதாகும்.

காவிரி துலா கட்டத்தில் நீராட  மாற்றுத் திறனாளியாக  இருந்த  ஒருவருக்கும் ஆவல் பிறந்தது.அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம்  முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது.தன்னுடைய இயலாமையை எண்ணி  வருந்திய அவர்,சிவ பெருமானை  நினைத்து மனமுருக வேண்டினார்.அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது.நீ இப்போது நீராடு உன்னுடைய பாவங்களும் கூட விலகும்.உனக்கும் முக்தி கிடைக்கும்என்றது.கங்காதேவியும்,கார்த்திகை முதல் நாள் வரை,காவேரி துலா கட்டத்தில் இருந்து மாற்றுத்திறனாளிக்கும் அருள்புரிந்தாள். கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்)முடவன் முழுக்கு என்கின்றனர்.



Leave a Comment