கண்மலரால் கிடைத்த சக்கராயுதம்


ஜலந்திராசுரன் மரணம் அடைந்த பிறகு அவனுடைய பிள்ளைகள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தனர். எனவே தங்களைப் பாதுகாக்கச் சொல்லி தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களே சிறிது காலம் பொறுத்திருங்கள், நான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து ஜலந்திரனைக் கொன்ற சக்கராயுதத்தைப் பெறவேண்டும் என்றார் திருமால். இவ்வாறே திருமால் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதனை தினமும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில் ஒரு நாள் ஒரு மலரை மட்டும் ஈசன் மறைத்து விட்டார். உடனே ஹரி தன் கண்மலரை எடுத்து ஈசனின் திருநாமத்தைக் கூறி அர்ச்சனையை செய்து முடித்தார். அவருடைய பக்திக்கு மெச்சி எதிரே தோன்றி தரிசனம் அளித்த ஈசன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
தேவர்களை மறுபடியும் அசுரர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். ஆகவே ஜலந்திரனை அழித்த சக்கராயுதத்தை எனக்கு தரவேண்டும். அதன் மூலமாக அசுரர்களை அழிக்கும் வலிமையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்விதமே திருமாலுக்கு சக்கராயுதத்தை அளித்ததோடு, தனக்காக ஹரி அர்ப்பணித்த கண்மலரையும் திரும்ப அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பூஜைக்கு மலர்கள் எத்தனை அவசியம் என்பதையும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நம் அன்பையும், பக்தியையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மலர்களுக்கு பதிலாக தன்னுடைய கண் மலரை சமர்ப்பித்ததன் மூலமாக திருமாலுக்கு ஈசனின் தரிசனம் கிடைத்ததோடு, சக்கராயுதமும் கிடைத்தது. எனவே மலர்களைக் கொண்டு நாம் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும் என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.



Leave a Comment