எங்கே நிம்மதி ?


 

பல நேரம் நாம் நிம்மதியையும் , மன அமைதியையும் தேடி எங்கெங்கோ அலைந்துக் கொண்டிருக்கிறோம்.  பல தேவைகளின் பொருட்டு அலைகடலென மனதை ஆர்ப்பரிக்க விட்டு,  அதில் நிம்மதி என்னும் முத்தை எடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறோம்.

நம் மனதில் தான் உலகின் மொத்த அமைதியும் , நிம்மதியும் குடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணரும் தருணத்தில் தான் இறைவனை நம்மால் உணர முடியும்.

இப்படி தான் ,ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று வெகு நாளாக  ஆசை. ஆனால் அவரை எப்படி சந்திப்பது,என்று குழப்பம். அதற்காக நிறைய பேரை கேட்டான். கடவுளைத்தானே பார்க்க வேண்டும். அதிலென்ன சிரமம் கோவிலுக்கு போ என்றார்கள். இவனும் உடனே புறப்பட்டான்.

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். முகத்தில் ஏகப்பட்ட குழப்பத்துடன் சென்றுக்கொண்டிருந்த  அவனிடம் அவர்," எங்கே போகிறாய் ?"என்று கேட்டார்.

“கடவுளை காண போகிறேன் !"என்றான் நம்மவன்.

“எங்கே போய் காணப்போகிறாய்” என்றார் ஞானி.

“வேறு  எங்கே கோவிலில் தான் !"என்றான்.

“சரி அங்கே போய்  ........"?

“அங்கே போய் அவரை வழிபட போகிறேன் ! "

“ஓ ...அப்படியா ?அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

“இல்லை தெரியாது "

“பிறகு எந்த வகையிலும்  கடவுளை அறியாத நீ , எப்படி அவரை வழிபட முடியும்?"

“சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே , அப்படியென்றால் "

“உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

ஞானியின் பதிலால் அவன் ரொம்பவே குழம்பி விட்டான்.

ஞானி பொறுமையாக அவனுக்கு தெளிவு படுத்தினார்.

“ஏ, மனிதனே ..... நீ செய்யப்போவது உண்மையான வழிபாடு இல்லை  .... இன்றைக்கு மனிதர்கள் " பக்தி" என்ற பெயரில் ஆண்டவனிடம்  பண்டமாற்று வியாபாரம் மாதிரி தட்சணை  கொடுத்து தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

 பக்தனோ ,“நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."என்றான் விடாப்பிடியாக.  ஞானியும் ,“ நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"என்றார் . “அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?". “கடவுளை  நீ சந்திக்க முடியாது . அவரை உணரத் தான் முடியும் !".

“அதற்கு என்ன தான் வழி ?”.

“தியானம் ஒன்றே வழி”

முன்னிலும் அதிகமாக குழம்பிய பக்தன், " தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"என்றான்.

“இல்லை,தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் .உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "என்றார் ஞானி.

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே  வந்தார் . ஞானியின் முன்னால் பணிவோடு நின்ற அவர் தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

அதற்கு ஞானி ,“முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை சுலபமாக நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார்.

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் என்றார். வெளிநாட்டுகாரர் விளக்கம் கிடைத்த மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான்.

“சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"என்று ஜம்பம் பேசினார்.

“ எப்படி அது ?என்றார் ஞானி.

 “ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"என்று சொல்லும் போதே ,அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்,"அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"உற்சாகமாக சொன்னான் .

“உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"என்று ஞானி கேட்க

"இல்லை ". அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

“யார் அவர் "

“அங்கே இருக்கிற அர்ச்சகர் !".வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"என்று சொல்லிவிட்டு சோர்வோடு நடந்து போனான் .

இறுதியில் முதலில் வந்த மனிதன் எழுந்தான். ஞானியிடம் விடை பெற்றான். திரும்பி நடந்தான் .ஞானி கேட்டார் :

“எங்கே போகிறாய் ? ”

“வீட்டுக்கு !”

“கோவிலுக்கு போகவில்லையா ?”

“இல்லை “

“அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?”

“ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதையும் , 'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையையும்  தெரிந்து கொண்டேன் "என்றான்.

ஞானி இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார்.

“ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் நான்,என்னிடம் என்ற அகந்தையில் இருந்து விலகியிருக்கிறோமோ , அவ்வளவு தூரம் இறைவனிடம் நெருங்கி இருக்கிறோம்  என்பது பொருள் என்றார் ஞானி.

 

‘நான்’ , ‘என்னிடம்’ இருந்து விலகி , இறைவனிடம் நெருங்குவோம் நாம்.



Leave a Comment