ஆரோக்கியத்தை அள்ளித் தரும் யோகா


 

( ஜூன் 21 சர்வதேச யோகா தினம் )

 

பாரத புண்ணிய பூமி உலகிற்கு பல அற்புத கலைகளை வழங்கியுள்ளது. இதில் தொன்மையான கலை தான் யோகா . நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான நன்மைகளை பெரும் போது , பணம், செல்வாக்கு , புகழ் என உயரும் போது அக்கம்பக்கத்தினர் எல்லாம் யோகம் தான் என்று சொல்வது வழக்கம். யோகா என்பதே இந்தியா உலகிற்கு கொடுத்த பெரும் யோகம்.

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம் .

யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம்  சீராகும் , மன அழுத்தத்தை குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும் .

 

                                                                               

 

அழகிய உடல் அமைப்பை பெறவும் சீரான  எடையை கடைபிடிக்கவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது.

மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்  யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும்  சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை யோகாவிற்கு உள்ளது. மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலை ஆரோக்கியமற்றது. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.

யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பையற்ற வயிற்றை பெறலாம்.

யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது

 

                                                                                        

 

யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.

மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது. முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.

கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.

 ஆனால் ,புதிதாக பயில்பவர்கள் , நல்ல ஆசானின் துணைக்கொண்டு ஆரம்பித்தல் நல்லது . ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.உடல் வளைந்து வலுக்கட்டாயமாக யோகா  செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்ய தவேண்டும்.ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும். இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 10-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

 

                                                                               

நம்முடைய பல பாரம்பரியங்களை மறந்து விட்ட நிலையில் , மீண்டும் அவைகளை மீட்டெடுத்து நோயற்ற பெரு வாழ்வு வாழ்வோம் .  



Leave a Comment