சீரடியில் உள்ள சாயிபாபாவின் பளிங்கு சிலையின் வரலாறு


 

இன்று சீரடியில் இருக்கும் பாபாவின் சிலை வெறும் பளிங்குக்கல்லால் ஆனா சிலை இல்லை. அது பல லட்சோபலட்ச அடியார்களின் அன்பு தெய்வம். தன்னை நாடி வரும் பக்தர்களுடன் ஆத்மார்த்தமாக சிலை வடிவில்,பேசும் தெய்வம்.தங்களைக் காக்க மனித உரு தரித்து வந்த தெய்வம் சமாதியில் இருந்துக் கொண்டும் தங்களுடன் பேச முடியும் என்று ஒவ்வொரு நிமிடமும், சாய் பக்தர்கள் உணரும் அந்த இடத்திற்கு அந்த சிலை வந்த கதையே ஒரு அற்புத நிகழ்வு.

 

1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.

 

முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வந்த நிலையில், ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு அங்கு  வந்தது, ஏன் வந்தது, யார் அனுப்பியது  என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், சீரடி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சீரடி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.

 

பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சிலை செய்ய மாதிரியாக, சாயி சமஸ்தான் அதிகாரிகளால் சிற்பிக்கு கொடுக்கப்பட்டது.  அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.

 

பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலை தான்  இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் சாயி ...சாயி என்று மன உருகி வணங்கி வழிபடப்பட்டு  வருகின்றது.

 

'சீரடி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா



Leave a Comment