சீரடி செல்வோம் வாருங்கள் .......


 

சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

தம் வாழ் நாளில் எளிமையைக் கடைபிடித்த பாபாவின்  கோவிலுக்கு மொத்தம் நான்கு  நுழைவாயில்கள் இருக்கிறது.

கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.

சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம்  எங்கு நின்றாலும் பாபா நம்மை  பார்ப்பது போலவே இருக்கும். மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக் குடையின் நிழலில் இருக்கிறது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான இந்தத்  திருவுருவச் சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது.

பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாங்கு  வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.

மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.

சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம். . பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.

சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியமாக கருதப்படுகிறது.

பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாக தருகிறார்கள்.

கோயிலுக்குள் நடக்கும் சாயிபஜன், கோயில் முழுக்க ஒலிக்கும்  வண்ணம்  ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது.

ஆலயத்திற்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த வசதி உள்ளது.

 சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்திற்கு பணம் கொடுக்கலாம்.

பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்திற்குள் தனி இடம் உள்ளது.

கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.

சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.

எனவே சர்வம் சாயி என்று சாயி நாமம் ஸ்மரிப்போம்....அவர் பாதம் பணிவோம் ...

ஓம் சாய்ராம்..!



Leave a Comment